திமுக ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் தேவைப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். அப்போது அவர் பேசியதவாது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர். குறுகிய காலத்தில் 1.5லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டில் ரூ.61.12 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் என்ற மருத்துவமனை தேவைப்படவில்லை. எய்ம்ஸ் விவகாரத்தில் திமுக பதில் கூற வேண்டும் என்று சொல்வது அமித்ஷா வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்கிற அமித்ஷாவின் கருத்து மகிழ்ச்சிதான். தமிழகத்தில் இருந்து தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும். தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பதன் மூலம் பிரதமர் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த திட்டங்கள் குறித்து நான் கேட்ட கேள்விக்கு அமித்ஷா பதில்தரவில்லை. 9 ஆண்டு கால சாதனை குறித்து நான் கேட்ட கேள்விக்கு இதுவரை அமித்ஷா பதில் தரவில்லை. அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை. திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்; இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்றார்.