கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழியில் ஒற்றை யானை ஒன்று கடந்து சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அட்டுகல் பகுதியிலிருந்து வந்த யானை பெரும்பாலும் இரவு நேரங்களில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தெரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியையும் வனத்துறையினர் மேற்கொண்டு வரும் இந்நிலையில் மருதமலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அந்த ஒற்றை யானை கடந்து சென்றுள்ளது. இதனை கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.