தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி நடைமுறையை மாநில அரசு அதிரடியாக திரும்பப் பெற்றது.
தமிழ்நாட்டில் இனி மாநில அரசின் அனுமதிக்குப் பிறகே, மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) விசாரணை மேற்கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் விவரம்: சிபிஐ எந்தவொரு மாநிலத்திலும் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும். இதற்கு தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 6-இல் வகை செய்யப்பட்டுள்ளது.
முன் அனுமதி அவசியம்: சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் கீழ், சில வழக்குகளுக்காக வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி நடைமுறையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாட்டில் மத்திய புலனாய்வுத் துறை, இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, மாநில அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டும். அதன்பிறகே, விசாரணையை மேற்கொள்ள முடியும்.
பிற மாநிலங்கள்: மாநில அரசின் அனுமதி பெற்றே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளம், மிஸோரம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.