அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஓமந்தூரார் மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், அவரை பரிசோதிக்க மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லாத காரணத்தால் இதயத்தில் அடைப்பு இருக்கிறதா என கண்டறிய ஆஞ்சியோகிராம்(இருதய ரத்த நாள பரிசோதனை) செய்யப்பட்டது.
இதில், செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லக்கூடிய மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் கீழ் உள்ள இஎஸ்ஐ மருத்துவர்கள் செந்தில் பாலாஜி உடலை பரிசோதிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.