அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தின் ரத்த நாளங்களில் வலதுபுறத்தில் 90 சதவிகிதம் அடைப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை சோதனைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றபோது நெஞ்சு வலிப்பதாக அவா் கூறியதையடுத்து ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட இசிஜி பரிசோதனையில் சிறிது மாற்றம் இருந்ததால், ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதில், இதய நாளங்களில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நிதீமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் முறையிட்ட நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள அடைப்பு குறித்து விரிவான மருத்துவ அறிக்கையை ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதில், செந்தில் பாலாஜியின் இதயத்தின் ரத்த நாளங்களில் வலதுபுறத்தில் 90 சதவிகிதமும், இடபுறத்தில் 80 சதவிகிதமும், மற்றொரு இடத்தில் சிறிய அடைப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கும் பட்சத்தில், உடனடியாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.