உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் கோப்பை – 2023 சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1923 வீரர் - வீராங்கனைகளுக்கு ரூபாய். 42.00 இலட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், கோடை விடுமுறை முடிந்து கல்விக்கூடங்கள் அனைத்தும் திறந்துவிட்டன.
நீங்கள் விளையாடுவதை கைவிடக்கூடாது. அதற்குத்தான் விளையாட்டு வகுப்பு இருக்கிறது. இங்கு அரசு ஊழியர்கள் பிரிவில் ஆசிரியர்களும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் கேட்காதீர்கள் என்று உரிமையோடு கூறிக்கொள்கிறேன். நம் மாணவர்கள் தொடர்ந்து விளையாடட்டும். அவர்களை விளையாட அனுமதியுங்கள்.
விளையாட்டுத்துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இப்போது ஓர் எழுச்சி இருக்கிறது. கிரிக்கெட் போட்டியை தாண்டி பல்வேறு தனி நபர் போட்டிகளில் நம்முடைய இளைஞர்களுக்கு மிகப்பெரியளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.