ஆம்பூர் அருகே உள்ள வனப் பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் மாந்தோப்பு, நெற்பயிற்கள் சேதமடைந்தது.
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் கடந்த ஓரிரு நாள்களாக யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் கடந்த சில நாள்களாக சுற்றித்திரிந்த காட்டு யானைகள் கூட்டம் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமப் பகுதி அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு வந்துள்ளன.
ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப்பல்லி கிராம பகுதியில் இரண்டு குட்டி யானைகளுடன் 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
அங்குள்ள மாந்தோப்பு நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் யானையை காட்டிற்குள் விரட்டுவதற்கான பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சென்னையில் இயல்பை விட 295% அதிகம் பெய்த மழை
ஏழைகளுக்கு சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.