சென்னை: விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அறநிலையத்துக்கு சொந்தமான அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தியதால், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல முடியாக நிலை எழுந்தது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் கோயிலுக்கு வருவாய் கோட்டாசியர் ஜூன் 7ஆம் தேதி சீல் வைத்தார்.
இந்நிலையில், கோயிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், அறநிலைத்துறைதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் அறநிலைத்துறையை அணுகலாம் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும்படி அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.