நெய்வேலி: கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து சின்ன சேலத்திற்கு அரசுப் பேருந்து தடம் எண் 254 வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. இந்தப் பேருந்தில் பணிக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதாலும், அவர்கள் பேருந்தினுள் ஏராததாலும் ஓட்டுநர் பேருந்தை வேப்பூர் வட்டம், அரசங்குடியில் இயக்காமல் 15 நிமிடம் நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை:
காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.