ஆவடியில் வீடு புகுந்து கார் ஓட்டுநர் கொலை!

ஆவடி அருகே வீடு புகுந்து கார் ஓட்டுநரை கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார்.
கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார்.

ஆவடி: ஆவடி அருகே வீடு புகுந்து கார் ஓட்டுநரை கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே பொத்தூர், செல்வ விநாயக நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). இவர் கார் ஓட்டுநர். இதற்கிடையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமழிசைச் சேர்ந்த ஜெயலட்சுமி (25) என்ற இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். 

ஜெயலட்சுமி தனது கணவர் சத்யா என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பொன்னேரி நீதிமன்றத்தில் இவர்களது விவகாரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை காலை சுரேஷ்குமார் வீட்டுக்குள் 3 நபர்கள் புகுந்து, அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த  ஜெயலட்சுமி மர்ம நபர்களை தடுத்த போது, அவர்கள் இவரது கையில் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் தலை, கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். 

மேலும் காயமடைந்த ஜெயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், சுரேஷ்குமார் சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமார் கொலைக்கு தகாத உறவு காரணமா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், காவல் துறையினர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com