சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு ஆறாம் வகுப்பு மாணவர் எழுதிய கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு இம்மாதத்துடன் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் இறையன்பு, தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது:
“என் பெயர் இறையன்பு. நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற போவதாக என் பெற்றோர்கள் மூலம் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன்.
நானும் எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும்குழியுமாக மாறி விடுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பலர் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவுகூர்ந்து எங்கள் தெருவுக்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு மாணவர் எழுதிய இந்த கடிதம், இணையத்தில் வைரலாகி வருகின்றது.