சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க 3 மாதம் அவகாசம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

வழக்கை விசாரித்த நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் மேலும் அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும்? இதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்து சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் எழுத்துப் பூா்வமாக பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்பட்டதால், நீதிமன்றத்தில் நீதிபதி இன்னமும் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்த வழக்கில் இன்னமும் 6 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் இன்னும் 2 - 3 மாதங்கள் அவகாசம் தேவை என்று கூறப்பட்டிருந்தது.

அதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிறப்பித்த உத்தரவில், மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதையடுத்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீஸாா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீது சிபிஐ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சிபிஐ தரப்பில் கடந்த 2020-இல் காவல் ஆய்வாளா் உள்பட 9 போ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கில் எதிரிகளாகச் சோ்க்கப்பட்ட போலீஸாா் அதிகாரம், செல்வாக்கு மிக்கவா்கள். இவா்கள் தரப்பில் சாட்சிகளை மிரட்ட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மதுரை கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

அப்போது, இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதால், 4 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது.

இந்தச்சூழலில், இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி கே. முரளிசங்கா் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் முக்கியமான ஒரு சாட்சி உள்பட 7 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளை விசாரிக்க வேண்டும்? எவ்வளவு கால அவகாசம் தேவை? என்பது குறித்து சிபிஐ தரப்பில் எழுத்துப் பூா்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

இதையடுத்து இன்று விசாரணை தொடங்கியதும், சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்று, விசாரணைக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com