ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் டெபாசிட் தொகையை திரும்பப்பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும்.
ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது:
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காங்கிரஸ் முன்னிலை:
இரண்டு சுற்று வாக்கு எண்ணிகை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 25,033 வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,354 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 2005 வாக்குகள் பெற்ற மூன்றாவது இடத்திலும், தேமுதிக 235 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளனர்.
முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆன்ந்தை விட சுயேட்சை வேட்பாளர் முத்துபாலா அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் 112 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 178 வாக்குகளும் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் 25,033 வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!
முதல் சுற்றில் நோட்டாவுக்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளது.
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெபாசிட் தொகையை திரும்பப்பெற...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும்.
தற்போது வரை காங்கிரஸ் 31,928 வாக்குகளும், அதிமுக 10,618 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,481 வாக்குகளும், தேமுதிக 254 வாக்குகளும் பெற்றுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறாத நிலையில், சுமார் 75 பேர் டெபாசிட் தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.