இளைஞர்களிடம் அத்துமீறல்! தமிழ் எழுத்தாளர் மீது தொடரும் பாலியல் புகார்கள்...

பிரபல தமிழ் எழுத்தாளர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகவழி பல இளைஞர்கள் எழுந்துள்ளன.
எழுத்தாளர் கோணங்கி
எழுத்தாளர் கோணங்கி
Published on
Updated on
3 min read

பிரபல தமிழ் எழுத்தாளர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நவீன தமிழ் இலக்கியத்தின் மாய யதார்த்தவாதக் கதை சொல்லியாக அறியப்படுபவர் எழுத்தாளர் கோணங்கி. கோவில்பட்டியைச் சேர்ந்த இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியவாதியாக செயல்பட்டு வருகிறார்.

மேலும், கல்குதிரை என்னும் இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார்.  இவர் எழுத்தில் பாழி, பிதிரா, த, நீர்வளரி போன்ற நாவல்கள் வெளிவந்துள்ளன. ‘மதினிமார்கள் கதை’ மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.

கோணங்கியின் எழுத்து நடை மிகச் சிக்கலானது என்றாலும் தனக்கான மொழிநடையை உருவாக்கிக் கொண்டவர். இலக்கிய பங்களிப்பிற்காக அவருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது  வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோணங்கி மீதி முகநூலில் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து முதலில் கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் நீண்ட குறிப்பை எழுதியுள்ளார்.

இதில், எழுத்தாளர் கோணங்கி நாடகக் கலையைக் கற்க வரும் இளைஞர்களிடம் பாலியல் அத்துமீறலைச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 

கார்த்திக் ராமச்சந்திரன் முகநூல் பதிவு: 

நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்

………

1. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் மாணவனான எனக்கு கல்லூரி சூழல் தமிழ் இலக்கியம், நாடகம் சார்ந்த அறிமுகத்தை வழங்கியிருந்த காலம். என் ஆர்வமிகுதியை பார்த்த பேராசிரியர் நல்லெண்ணம் கருதி மணல்மகுடி நாடக குழுவிடம் அறிமுகப்படுத்தினார்.

2. 2013 சனவரி மாதம், குழுவில் இணைவதற்கு முன்பே மணல்மகுடியின் நாடகப் பிரதி, முருகபூபதியின் நேர்காணல்களை கல்லூரி நூலகத்தில் வாசித்திருந்தேன். கோணங்கியின் பிதிரா, பாழி போன்ற நூல்ககளை பார்த்திருந்தேன்.

3. பதின்மவயது பையனான நான் குடும்பம், பள்ளி மற்றும் கல்லூரி நட்புவட்டம் தாண்டி சந்திக்கும் நபர்கள் இவர்கள். குழுவில் சேர்ந்த சில வாரங்களில் சர்வதேச நாடக விழாவிற்காக புது டில்லி பயணம் மற்றும் கோணங்கி அறிமுகம் என வாழ்வு கனவுபோல் இருந்தது.

4. கோணங்கி தனிப்பட்ட முறையில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அழைத்து, பாலியல் சீண்டல்களை செய்துக் கொண்டிருந்தார். பெரிய எழுத்தாளர், நமக்கு தீங்கு விளைவிக்கமாட்டார் என 100% நம்பினேன். கோணங்கியையும் பூபதியையும் God Father போல நினைத்துக் கொண்டிருந்த பதின்மவயது பையனான எனக்கு பாலியல் சுரண்டல் பற்றி விழிப்புணர்வு இல்லை.

5. இதன் பின்னர் கோணங்கியின் போன் அழைப்பு வந்தால் பதற்றமும் பயமும் வரும். பாலியல் சுரண்டலை தவிர்க்கும் பொருட்டு கோணங்கியின் போன் அழைப்புகளை தவிர்ப்பேன். அப்போதெல்லாம், பூபதி அழைத்து “கோணங்கிக்கு உதவி தேவை நீ உடனே அண்ணனை பார் என அணையிடுவார்”. பூபதியின் வார்த்தைகளை தட்டஇயலாமல் உடன் நண்பர்களை அழைத்தச் சென்று சூழலை சமாளிக்க திட்டமிடுவேன். அதற்கும் கோணங்கி கண்டிப்பார். “இவ்வாறு தான் மௌனியும் நகுலனும் தனக்கு இலக்கியம் படைக்கும் ஆற்றலை வழங்கினார்கள் உனக்கும் அது கிடைக்கும்” என்பார். அதாவது ஆண்குறி வழியாக இலக்கிய படைப்பாற்றல் தலைமுறை தலைமுறையாக கைமாறுகின்றது என்கிறார்.

6.கொஞ்சம் கொஞ்சமாக பாலியல் சுரண்டலால் மனசிதைவுக்கு உள்ளானேன். அவ்வாறான மன உணர்வும் கலைஞனை வளர்த்தெடுக்கும் என நம்பவைக்கப்பட்டேன். உள பிரச்சணைகளுக்கு காரணம் பாலியல் சுரண்டல் தான் என்ற விழிப்புணர்வு இன்றி இருந்தேன்.

7. என் சீரற்ற மனநிலையை கருதி குடும்பத்தினர் என்னை நாடகத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அப்போதுகூட நாடக குழு மீது எனக்கு பற்று குறையவில்லை.

8. நாட்கள் செல்ல செல்ல மனநிலை நரகமானது. என் உளச்சிக்கல்களின் விளைவாக தற்கொலை எண்ணங்கள் வந்தது. அதன்பின்னர் என் குடும்பத்தினர் அரவணைப்புடன் , தீவிர மனநல ஆலோசணையின் கீழ் ஒரு வருட காலத்திற்கு மேலாக இருந்தேன். அப்போது கோணங்கி மற்றும் பூபதியிடம் இருந்துவிலகி இருந்தேன்.

9. நிகழ்த்துக்கலை ஆய்வுகளுக்காக நீண்ட காலத்திற்கு பிறகு 2021ல் மணல்மகுடி குழுவினருடன் நெருக்கமானேன். இந்த சில மாதங்களாக பாலியல் வன்முறை பற்றிய புரளிகளாகவும் நகைச்சுவையாகவும் பேச்சு வந்தது.

10. மணல்மகுடியில் ஜெயபிரகாஷ் என்ற இளம் நாடக நடிகன், தனக்கு பாலியல் சுரண்டலால் social anxiety(சமூக பதற்றம்) இருப்பதை சொன்ன போது எனக்கிருந்த உளப்பிரச்சணைகளுக்கும் கோணங்கி மற்றும் மணல்மகுடி சூழல் உருவாக்கிய பாலியல் வன்முறைதான் காரணம் என உணர்ந்த போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

11. இங்கு கோணங்கியின் பாலியல் வன்முறைகள் normalise(சாதாரணம்) ஆக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக வன்முறைக்கு உள்ளான எவருக்கும் பூபதியோ கோணங்கியோ நேரடியாக பதில் அளிக்கவில்லை.

12. கிட்டத்தட்ட டஜன் கணக்கில் இளம் நாடக கலைஞர்களும் வாசகர்களும் கோணங்கியால் தொடர் சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களாக தன் அனுபவத்தை வெளியே சொல்வார்கள் நான் யாரையும் குறிப்பிட இயலாது.

13. அநாமதேயமாக பாலியல் வன்முறை குறித்து பொதுவெளியில் பேச்சு வந்ததால் நானும் சுய அனுபவத்தை பதிவிடும் தைரியம் பத்துவருடங்களுக்கு பின் கிடைத்திருக்கிறது. இது ஒரு விழிப்புணர்வுக்கானது. எதிர்வரும் காலத்தில் இது தொடர கூடாது. கலை மற்றும் இலக்கியம் சார் சமூகம் தன்னுள் ஒரு எதிர்வினையாற்ற வேண்டும்.

14. வெளியே சொன்னால் நாடக கலை அழிந்துவிடும் என்று காரணத்திற்காக பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளுங்கள் என குழுவினர் எச்சரிக்கிறார்கள். The Artists are so vulnerable then the art. இங்கு கலைஞனாக பாதிக்கப்பட்ட நடிகர்களையே குறிப்பிடுகிறேன். கலை என்ற பெயரில் வன்முறையை வெளியே சொல்லாமல் இருக்க இயலாது.

15. யாரிடமும் நீதி கேட்ட தோன்றவில்லை. உங்கள் முன் எச்சரிக்கை பதாகையை மட்டும் காட்ட விரும்புகிறேன்.

16. பெரிய எழுத்தாளர்கள் மீதான பிம்பங்கள் என் பதின்ம பருவத்திலேயே உடைந்துவிட்டது. என் மீம்கள் மானசீகமாக பெரிய பிம்பங்களை பற்றிய பகடியை கொண்டிருப்பதற்கு இவைதான் காரணம்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் பல எழுத்தாளர்களும் கோணங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

மேலும், சிலர் தங்களுக்கும் கோணங்கியால் இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

புகார்கள் குறித்து கோணங்கி தரப்பிலிருந்து இதுவரை எந்த மறுப்பும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com