மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எனது பணிகளைத் தொடருவேன்.
தேர்தல் ஆணைய நடத்தைகளில், வாக்குப்பதிவில் எந்தவித தவறும் நடைபெறவில்லை என கூறியவர் தென்னரசு. ஆனால் தற்போது பணநாயகம் வென்றதாக தோல்வி விரக்தியில் எதிர்மாறாக பேசுகிறார்.
எனது மகன் இருந்து செய்ய வேண்டிய பணிகளை தொகுதி மக்களுக்காக நான் செய்வேன். முதல்வரை விரைவில் சென்று சந்திக்க வேண்டும். மக்களவைக்கு பெரிய அணி உருவாக வேண்டும். காங்கிரஸ் இருந்தால்தான் அந்த கூட்டணிக்கு மரியாதை கிடைக்கும். மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம்தான் ஈரோடு கிழக்குத்தொகுதியில் கிடைத்துள்ள வெற்றி எனக் குறிப்பிட்டார்.