சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் முன்பே ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம் இவர் தாட்கோவில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன்கள், அருண்பிரசாத் மற்றும் பிரசாத், ஆகியோர் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 50 செண்ட் இடம் மற்றும் வீட்டுமனைகளை இவரிடம் இருந்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது .
மேலும், இது மட்டுமின்றி அவரது பெயரில் இருந்த சொத்துக்களை ஸ்ரீமுஷ்ணம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் உதவியுடன், அவரது இரு மகன்களும் அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சம்பந்தம் சட்டவிரோதமாக தனது பெயரில் இருந்த சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் உதவி ஆட்சியர் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பெறும் அலுவலர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும், அந்த மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.
மனு மீதான விசாரணை கடந்த மார்ச்.6 தேதி நடைபெற்ற போது சம்பந்தம் ஆஜராகினார்.
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்ற சம்பந்தம் தன் தரப்பு நியாயங்களையும், ஆதாரங்களையும் எடுத்துக்காட்டிய போது, அதனை உதவி ஆட்சியர் பார்க்காமல் கையால் தட்டி விட்டும் சார் ஆட்சியரின் உதவியாளர் சம்பந்தத்தை மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு கேளியும் கிண்டலும் செய்துள்ளதாக தெரிகிறது. பிறகு சார் ஆட்சியர் வெளியே போ என்று கூறியும் சம்பந்தத்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் பகுதியில் கூத்தங்கோயில் பகுதியில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள புதன்கிழமை வருகை தந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் முன்பே சம்பந்தம் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர்.