சென்னையில் நாளை மறுநாள்(மார்ச் 11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.03.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிக்க | சென்னை அண்ணா நகர் கோபுரம் திறப்பு எப்போது?
மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.