பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருவாளி பகுதியிலிருந்து மங்கை மடம் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் முதல்கட்டமாக பழைய தார் சாலையை சீரமைத்து, அதன் மீது எம்-சாண்ட் கலவை கொட்டப்பட்டு கடந்த 15 நாட்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எம்-சாண்ட் கலவை மீது தினம்தோறும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால், தண்ணீர் ஊற்றப்படாததால் சாலையில் செல்லும் வாகனங்களால் சாலை முழுவதும் புழுதிப் படலம் காணப்படுகிறது.
இந்தப் பகுதி வழியாகத்தான் நாங்கூர், பூம்புகார் கேது கோவில், சுற்றுலா தளம், திருவெண்காடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலையை பயன்படுத்தி தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு புகார் அளித்தும், சாலையின் மேற்பரப்பில் தண்ணீர் ஊற்றப்படவில்லை, புழுதி கிளம்புவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இந்த புழுதியால் வருகின்ற வாகனம் தெரியாமல் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.