தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் விடியோ மூலம் அவர் பேசியதாவது, ''மாணவ, மாணவிகள் தயக்கமின்றி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். எந்த கேள்விகளாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது.
தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி அடைந்துவிட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதற்காக அல்ல, அது உங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதாகும்.
பாடங்களை ஆழ்ந்து படித்து, புரிந்துகொண்டு தேர்வில் விடைகளை முழுமையாக எழுதுங்கள். முதல்வராக மட்டுமின்றி உங்கள் வீட்டில் ஒருவனாக நான் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன்.
உங்களின் வெற்றிக்காக உங்களின் பெற்றோர், ஆசிரியர்களை போல் நானும் காத்திருக்கிறேன். வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்வுகள்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 (நாளை) தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.