சுங்க கட்டணம் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
ஏற்கனவே, கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மையால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பகுதி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசு அமைத்துள்ள சாலையில், தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலிக்க சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இவற்றை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொதுமக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன.
சுங்கச் சாவடிகள் சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சட்ட விதிகள் எதையும் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கடும் கண்டத்திற்குரியது.
எனவே, மத்திய அரசு உத்தேசித்துள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும் என மத்திய அரசை பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.