வாழப்பாடியில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் பலியானார். அவரது நண்பர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, மது போதையில் ரயில் பாதையில் நின்ற இளைஞர், ரயில் மோதி பரிதாபமாக பலியானார். இவரைக் காப்பாற்ற முயற்சித்த இவரது நண்பர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கேயன் (22). இவரது நண்பர் சபரி (27). ஆகிய இருவரும் திங்கள்கிழமை பகல் 1.30 மணி அளவில், வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே, சேலம் - விருதாச்சலம் ரயில் பாதையில் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, காரைக்காலில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில், ரயில் பாதையில் நின்றிருந்த இளைஞர் காங்கேயன் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இவரைக் காப்பாற்ற முயற்சித்த இவரது நண்பர் சபரி காயத்துடன் உயிர் தப்பினார். சபரி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக் குறித்து சேலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.