ஆம்பூர் பேருந்து நிலையத்தில் கழிவறை பின்புறம் அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு அவசர தாலி கட்டிய கையோடு அங்கிருந்து தப்பிய காதல் ஜோடியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் அவசர அவசரமாக தாலி கட்டிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்படுவதாலும், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நிறுத்தி விடுவதால் பேருந்து நிலையம் இரவு நேரத்தில் சற்று வெறிச்சோடி காணப்படும்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த காதல் ஜோடியினர் அங்குள்ள கழிவறை பின்புறமாக சென்று யாரும் இல்லாததை அறிந்து அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க | காற்று மாசு பாதிப்பு: உலகில் எட்டாவது இடத்தில் இந்தியா!
இதனை அறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிலையத்தில் யாரும் இல்லாத இடத்தில் அவசர அவசரமாக தாலி கட்டிக் கொண்ட காதல் ஜோடியினர் யார்? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அங்குள்ள கடைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்து நிலையத்தில் சிசிடிவி பொருத்தப்படாததால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் காதல் ஜோடி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடப்பதாகவும், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.