சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரைவத் தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வெற்றிக்குப் பிறகு நலத் திட்டப் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு புதன்கிழமை மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னை போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு இதய நல மருத்துவா்களும், பொது மருத்துவா்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு வியாழக்கிழமை அவா் வீடு திரும்புவாா் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிக்க | மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் ஒரு சில நாள்களில் அவர் வீட்டிற்கு திரும்புவார் என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.