ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க- மெலிந்த தோற்றத்தில் ரோபோ சங்கர்.. ரசிகர்கள் அதிர்ச்சி
அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இதனிடையே மேஜர் ஜெயந்தின் உடல், தில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு மதுரை கொண்டுவரப்பட்டு, பெரியகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் நாளை அடக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.