போக்குவரத்துத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது, போக்குவரத்து பணியாளர்கள் தேர்வுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்காக, தகவல்தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிக்கப்படாத, 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை, தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, முடிக்கப்பட்டுள்ளது. சம்பள விகிதம் குறைக்கப்பட்டு, சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல், ஒரே சம்பள விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க டெண்டர் பணிகள் நடந்து வருகிறது. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதும், நவக்கிரக கோயில்களை இணைக்கும் வகையில், பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர், முறையாக விடுப்பு எடுக்காமல், தொடர் விடுமுறையில் சென்று விடுகிறார்கள். முறையான தகவல் இல்லாத சூழலில், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே, அதைப் பூர்த்தி செய்ய அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் நிலை உள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் யாரும் புதிதாக பணியமர்த்தப்படவில்லை. தற்போது பணியாளர்கள் தேர்வுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.