சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் குடும்பத்தினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய்யை கைப்பற்றி, தீக்குளிக்க முயன்ற 4 பெண்கள் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் விசாரணைக்காக சேலம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது ஆட்டோவில் ஏற மறுத்து நான்கு பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜுவின் சகோதரர் குடும்பத்தினர் ஆறரை ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாகவும், தங்களது நிலத்தை மீட்டுத் தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டது விசாரணை தெரியவந்தது.
இதேபோல் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவரின் குடும்பத்தினர் 16 நபர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு ஆட்டோ மூலமாக விசாரணைக்காக சேலம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிக்க: தளபதி 68: வெங்கட் பிரபு இயக்குகிறாரா?
அவரிடம் நடத்திய விசாரணையில், அம்மாசி என்பவரின் தந்தைக்கு தானமாக கொடுக்கப்பட்ட 25 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்துள்ளனர். அப்போது பாகல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தனிநபருக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களது வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.