

இளம் சிறார் இல்லங்கள் குறித்து தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என்று தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து சிறார் இல்லங்கள் குறித்து பொதுமக்கள்/நிறுவனங்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என்று நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதி கே. சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு, இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஒரு நபர் குழுவை அமைத்துள்ளது.
அக்குழு 2015-ம் வருட இளம் சிறார் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உறைவிட வாசிகளின் நிர்வாகம், உள்கட்டமைப்பு, உடல் நலன் மற்றும் மருத்துவ வசதிகள், பயிற்சி மற்றும் திறன் கட்டமைத்தல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, பணியாளர்கள், அக்கறை கொண்ட நிறுவனங்களின் பங்கு, பின் கவனிப்புப் பிரச்சனைகள், இளம் சிறார் நீதி சட்டம் மற்றும் அதன் விதிகள் குறித்த திருத்தங்கள் இவை பற்றி ஆராயும்படி குழுவை பணித்துள்ளது.
இப்பொருள் குறித்து அக்கறை உள்ளவர்கள்/நிறுவனங்கள் விருப்பப்பட்டால் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஒரு நபர் குழு, 147, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை – 600004 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம். chandruonjuvenilehome@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம். நேரில் சந்திக்க விரும்புவோர் வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மேற்கண்ட விலாசத்திற்கு வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.