

சென்னை: சென்னை அடுத்த சைதாப்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயிலிலிருந்து 8 பெட்டிகள் திடீரென முன்பிருந்த பெட்டியிலிருந்து கழன்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு புறப்படத் தயாரானது.
அப்போது திடீரென, நான்கு பெட்டிகள் மட்டும் ரயிலிருந்து துண்டித்துக்கொண்டு பின்னோக்கி நகரத் தொடங்கியது. தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பெட்டியிலிருந்து, பின்னால் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள் திடீரென கழன்றுவிட்டதைப் பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர. எனினும், பெட்டிகள் எதுவும் தடம்புரளாததால் பயணிகள் காயமின்றி தப்பினர்.
பெட்டிகள் கழன்றது தெரியாமல், ரயிலை இயக்கிய ஓட்டுநர், சிறிது தூரம் சென்று ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கழன்ற ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் சேவை இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டதால் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
ரயில் பெட்டிகள் கழன்று நடுவழியில் நின்றது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.