திமுக வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திமுக வார்டு உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


சென்னை: மேட்டுப்பாளையம் நகர மன்றக் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக வார்டு உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மேட்டுப்பாளையத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து கழக வார்டு உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கேள்வி எழுப்புவதற்காக தீர்மானித்திருந்த நிலையில், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக கழக வார்டு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்ததைக் கண்டித்து அக்டோபர் 31 முதல் நகர மன்றத்தில், 8 கழக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை (நவ.2) உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களையும், இவர்களை பார்வையிடச் சென்ற கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே. செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களையும் கைது செய்த திமுக-வின் திமுக அரசின் காவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேட்டுப்பாளையம் நகர மன்ற வளாகத்திற்குள்ளேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது, மேல் நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் காவல் துறைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com