தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்!

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.

News image

கொட்டும் மழையில் அம்பாசமுத்திரம் கிளைச் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அமர்பிரசாத் ரெட்டியை நடத்தி அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.

Updated On :3 நவம்பர் 2023, 10:42 am

DIN

அம்பாசமுத்திரம்: அமர் பிரசாத் ரெட்டிக்கு ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதையடுத்து ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர்  தொடர்ந்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டிக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பல்கலைச் செல்வன் ஜாமீன் வழங்கினார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவின் தலைவாராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்ட பாஜக கொடியை அகற்றும் போது பொக்லைன் இயந்திரத்தைச் சேதப்படுத்தியதாககாவல் துறையினர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து சிறையிலடைத்தனர். 

தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுவதோடு காவல் துறையினர்  ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியும் வருகின்றனர்.

இதையடுத்து அக்டோபர் மாதம் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரிலிருந்து பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம்  நடைபெற்ற போது காவல் துறையினரை, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர்  அமர் பிரசாத் ரெட்டி, மாநிலப் பொதுச் செயலர் பால கணபதி, கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் ரத்தினகுமார், ஆழ்வார்குறிச்சி பேரூர் தலைவர் குமார், மாவட்ட  இளைஞரணி துணைத் தலைவர் சடாச்சரவேல், வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் காந்தி, மாவட்ட பட்டியல் அணிப் பொதுச்செயலர் முருகன், இந்து முன்னணி நகரச் செயலர் பரமசிவன், கடையம் மேற்கு ஒன்றியத் தலைவர் செந்தில் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டியை ஆஜர்படுத்த சென்னை, புழல் சிறையிலிருந்து காவல் துறையினர்  நவ. 2 ஆம் தேதி பேருந்து மூலம் அம்பாசமுத்திரம் அழைத்து வந்தனர். இன்று(நவ. 3) அதிகாலை 3 மணியளவில் அம்பாசமுத்திரம் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர். பகல் 12 மணியளவில் மழை பெய்த நிலையிலும் கிளைச்சிறையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரமுள்ள நீதிமன்றத்திற்கு  அழைத்து வந்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பல்கலைச் செல்வன் முன்பு அமர் பிரசாத் ரெட்டியை ஆஜர்படுத்தினர். 

இந்த வழக்கில் நீதிபதி பல்கலைச் செல்வன், அமர் பிரசாத் ரெட்டியை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார்.

அமர்பிரசாத் ரெட்டி அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் முன்பு திரண்ட பாஜக தொண்டர்கள் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.