தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இரவோடு இரவாக "நீட் விலக்கா" - "மது விலக்கா" என்ற வாசகத்துடன் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதே போல் நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சை மாநகரம் முழுவதும் சிகப்பு - கருப்பு வண்ணத்தில் "நீட் விலக்கு நமது இலக்கு" என்ற வாசகத்துடன் முக்கிய வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த போஸ்டர்கள் யார் ஒட்டியது, எந்த கட்சியினர் ஒட்டியுள்ளனர் என்பது குறித்து போஸ்டரில் எதுவும் இடம் பெறவில்லை.
இதையும் படிக்க | பெண் பயணியை ‘ஆண்ட்டி’ என்று அழைத்த நடத்துநா் மீது வழக்கு
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அந்த போஸ்டர்களின் நீட் என்ற வார்த்தைக்கு பதிலாக மேலே கருப்பு ஸ்டிக்கரில் மது என்ற வார்த்தை உள்ள ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இதனால் நீட்டுக்கு பதிலாக மது என்ற வார்த்தை மாற்றி "மது விலக்கு நமது இலக்கு" என்ற வகையில் அந்த போஸ்டர்கள் தஞ்சை மாநகரம் முழுவதும் காட்சியளிக்கின்றன.
இரவோடு இரவாக தஞ்சை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள "நீட் விலக்கா" - "மது விலக்கா" போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது.