ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு நவம்பர் 6-ல் விசாரணை!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை நவம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுள்ளது உச்சநீதிமன்றம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நவம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுள்ளது.

நவராத்திரி மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து அக்டோபர் 18-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடந்த காலங்களில் நடத்திய ஊர்வலங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை கணக்கில் கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊர்வலத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை நடத்துவதற்கு மிகக் குறுகலான சாலைகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளாக தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும் அனுமதி கோரியுள்ளனர். அதற்கான உரிய காரணத்தை அவர்கள் கூறவில்லை. அந்த கோரிக்கைகளை காவல்துறையினர் பரிசீலித்து வந்த நிலையில், உடனடியாக அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏராளமான ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.

உளவுத்துறை உள்ளீடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியவற்றைப் பரிசீலித்தும், மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலங்கள் மத மோதல்களுக்கு வழிவகுத்ததைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு இந்த அமைப்பின் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுத்தது.

இந்த விவகாரத்தில் பிரதிவாதிகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்ய இடமில்லை என்றபோதிலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் திங்கள்கிழமை (நவம்பர் 6) அன்று விசாரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com