சென்னை: சென்னை அசோக் பில்லர் சந்திப்பில் திங்கள்கிழமை காலை இரு கார்களுக்கான ரேசிங்கில் 75 வயது மூதாட்டி பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
சென்னை அசோக் பில்லர் சந்திப்பில் திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாளையொட்டி பட்டபகலில் இரு கார்களுக்கான ரேசிங்கில் ஒரு கார் மற்றொரு காரை முந்தி செல்ல முயன்றபோது சாலையை கடக்க முயன்ற 75 வயததான மூதாட்டி ஜெயம்மாள் மீது 24 வயது மதிக்கத்தக்க ஹரிஹரன் ஓட்டி வந்த TN 01 AJ 9087 எண் ஹோண்டா சிவிக் கார் மோதியது.
இதில், மூதாட்டி ஜெயம்மாளின் இடது கால், நெற்றி மற்றும் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயம்மாள் ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பந்தயத்தில் ஈடுபட்ட மற்றொரு கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.