நத்தம் அருகே இருவர் வெட்டிக் கொலை: மதுபோதையில் வெட்டியவர் கைது

கோசுகுறிச்சி கரையூரில் மதுபோதையில் மகள், தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நத்தம் அருகே இருவர் வெட்டிக் கொலை: மதுபோதையில் வெட்டியவர் கைது
Published on
Updated on
1 min read

திண்டுக்கல்: நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரில் ஈஸ்வரன் என்பவர் அவரது தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை மதுபோதையில் வெட்டிக் கொலை செய்துள்ளார். மேலும் அவரது மகள் மற்றும் 2 மாடுகளையும் அரிவாளால் வெட்டியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூரை சேர்ந்தவர்  ஈஸ்வரன் (45). இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும்(38), நதியா என்ற மகளும்  உள்ளனர். இவர்  திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர் குடித்து விட்டு மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மகள் நதியாவை மதுபோதையில் ஈஸ்வரன் அரிவாளால் வெட்டியதில், படுகாயம் அடைந்த நதியா வீட்டை விட்டு வெளியே  ஓடியதில் வீட்டின் முன் உள்ள சாலையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அப்போது வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் செல்லாயியையும் (75) வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வீதியில் அரிவாளுடன் மது போதையில் சுற்றித்திரிந்த ஈஸ்வரன் அப்பகுதியில் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த பெரியனாண்டி அம்பலம் (75)  என்ற முதியவரை வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த 2 மாடுகளையும் வெட்டி உள்ளார். மாடுகள் அலறி துடிக்கும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஈஸ்வரனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நத்தம் போலீசார் செல்லாய், பெரியனாண்டி அம்பலம் ஆகியோரது உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மகள் நதியாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நதியா கவலைக்கிடமாக உள்ளார்.

மது போதையில் மகள் மற்றும் தாய், பக்கத்து வீட்டுக்காரர் என மூன்று பேரை வெட்டி இருவரை படுகொலை செய்த ஈஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com