அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

அரையிறுதியில் முதல் அணியாக பிரான்ஸ்: மொராக்கோவை வீழ்த்தி முன்னேறியது

ஃபாக்ஸ்பரோ, ஜூலை 10: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான பிரான்ஸ் 2-0 கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது.

News image

2026 கால்பந்து உலகக் கோப்பை. - படம்: ஏபி

Updated On :11 ஜூலை 2026, 8:16 am IST

ஃபாக்ஸ்பரோ, ஜூலை 10: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான பிரான்ஸ் 2-0 கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது.

அமெரிக்காவின் ஃபாக்ஸ்பரோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பிரான்ஸுக்காக கிலியன் பாபே, ஆஸ்மேன் டெம்பெலெ ஆகியோர் கோல் அடித்தனர்.

முன்னதாக 25-ஆவது நிமிஷத்தில் பாபே அருமையான கோல் வாய்ப்புடன் பந்தை பெனால்ட்டி ஏரியாவில் கடத்திச் சென்றபோது, மொராக்கோ டிஃபெண்டர் நுசாயிர் மஸ்ருயியால் தள்ளிவிடப்பட்டார். அதற்காக கள நடுவர் பெனால்ட்டி வாய்ப்பு வழங்கினார்.

அந்த வாய்ப்பில் பாபே கோல் போஸ்ட்டின் வலது பக்க கார்னரை நோக்கி உதைக்க, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் புனு அதை துள்ளியமாகக் கணித்து பந்தைப் பிடித்து தடுத்தார்.

மொராக்கோவுக்கான நல்லதொரு கோல் வாய்ப்பு முதல் பாதி முடிவடைய இருந்த தருணத்தில், ஃப்ரீ கிக் வாய்ப்பில் கிடைத்தது. அதைக் கையாண்ட அச்ரஃப் ஹகிமி, பந்தை கோல் போஸ்ட்டின் வலது பக்கத்தில் வெளியே அடித்து வீணடித்தார்.

இதனால் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் பிரான்ஸýக்காக முதலில் கிலியன் பாபே 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். அவர் பெனால்ட்டி பகுதியில் பந்தை தன் வசம் பெற்று, இரு அடிகள் கொண்டு சென்று, பிறகு நேராக ஒரே ஷாட்டில் கோல் போஸ்ட்டினுள் பந்தை செலுத்தினார்.

பின்னர் ஆஸ்மேன் டெம்பெலெ 66-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் கோல் கணக்கை 2-ஆக உயர்த்தினார். பந்தை கடத்திச் சென்று மொராக்கோ டிஃபெண்டர்களை தன் பக்கம் இழுத்த பாபே, டெம்பெலெ கோல் அடிப்பதற்கு சாதகமான சூழல் ஏற்பட்ட தருணத்தில் பந்தை அவருக்குக் கொடுத்தார். டெம்பெலெ இந்த உலகக் கோப்பை போட்டியில் தனது 5-ஆவது கோலை பதிவு செய்தார்.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், மொராக்கோ டிஃபெண்டர் உதைத்ததில் கிலியன் பாபேவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதாகத் தெரிந்த நிலையில், அவர் களத்திலிருந்து வெளியேறினார். எனினும் தாம் நலமுடன் இருப்பதாக ஆட்டத்துக்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

3

இத்துடன் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது (2018, 2022, 2026).

5

இந்த உலகக் கோப்பை போட்டியில் இத்துடன் பாபே 8, டெம்பெலெ 5 கோல்கள் அடித்துள்ளனர். ஒரே போட்டியில் ஒரே அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட கோல்கள் அடித்தது, கடந்த 24 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன், 2002-இல் பிரேஸிலின் ரொனால்டோ (8), ரிவால்டோ (5) கூட்டணி அவ்வாறு தலா 5 கோல்கள் அடித்திருந்தது.

2

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ, தொடர்ந்து 2-ஆவது முறையாக பிரான்ஸால் வெளியேற்றப்பட்டது. 2022-ஆம் ஆண்டு அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 கோல் கணக்கில் தோல்வி கண்ட மொராக்கோ, இந்த முறை காலிறுதியில் அதே கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோற்றது.

3

ஒரு உலகக் கோப்பை போட்டியில் 5 கோல்கள் அடித்த 3-ஆவது பிரான்ஸ் வீரராக ஆஸ்மேன் டெம்பெலெ பெருமை பெற்றார். கிலியன் பாபே, ஜஸ்ட் ஃபான்டெய்ன் ஆகியோர் முதலிருவர்.

8

நடப்பு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவராக, 8 கோல்களுடன் ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸ்ஸியின் கணக்கை பாபே சமன் செய்துள்ளார்.

20

உலகக் கோப்பை போட்டிகளில் பாபே இத்துடன் 20 ஆட்டங்களில், 20 கோல்கள் அடித்திருக்கிறார். மொத்த உலகக் கோப்பை கோல்கள் கணக்கில் அவர் 2-ஆம் இடத்தில் இருக்க, மெஸ்ஸி (21) முதலிடத்தில் தொடர்கிறார்.

இன்றைய ஆட்டங்கள்

நார்வே - இங்கிலாந்து

நள்ளிரவு 2.30 மணி

மியாமி கார்டன்ஸ், அமெரிக்கா.

அடுத்து... (ஜூலை 12)

ஆர்ஜென்டீனா - சுவிட்ஸர்லாந்து

காலை 6.30 மணி

கேன்சாஸ் சிட்டி, அமெரிக்கா.

நேரலை: யுனைட்8 ஸ்போர்ட்ஸ், ஜீ5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.