திருச்சி: திருச்சியில் இருந்து பெங்களூரு புறப்பட தயாரான விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 70 பயணிகளுடன் இன்று காலை 8.05 மணிக்கு இண்டிகோ விமானம் பெங்களூரு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
எனவே, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து, பயணிகளை விமானத்திலேயே அமர வைத்த நிலையில் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் கோளாறு சரி செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் விமானத்திலேயே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து விமான நிறுவனம் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது.
அதன்படி பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள், பகல் 2 மணிக்கு சென்னை செல்லும் விமான மூலம் சென்னை சென்று, அங்கிருந்து பெங்களூரு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.