கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் உள்ள சுருளிமலை ஐயப்பனுக்கு வெள்ளிக்கிழமை நீராட்டு விழா நடைபெற்றது, பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சுருளிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர். உற்சவர் நீராட்டுக்காக அருவிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். மீண்டும் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டு மண்டல, மகர ஜோதி பூஜைகளுக்கான விரதத்தை தொடங்கினர்.
இதையும் படிக்க | பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
அருவிக்கு செல்லத் தடை
ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியில் சுருளி அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள், வெள்ளிக்கிழமை அருவிக்கு செல்லும் போது திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதிக்கவில்லை.
இதுபற்றி வனத்துறை ஊழியர் ஒருவர் கூறும்போது, கடந்த சில நாட்களாக யானைக்கூட்டம் அருவி செல்லும் வழியில் நடமாடி வருகிறது, அதனால் அருவியில் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.