

களக்காடு: நான்குனேரியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடைக்குள் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் வானுமாமலை (45). இவர் தனியார் தொலைக்காட்சியில் நான்குனேரி வட்டம் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நான்குனேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வானுமாமலை மற்றும் அவரது மனைவி இருவரும் கடையை திறந்து வைத்து பணி செய்து கொண்டிருந்தனராம்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் கடை முன்பு வந்த நின்ற மறுகால்குறிச்சி மகாதேவன் தெருவைச் சேர்ந்த உதயகுமார் மகன் ராஜேஷ் (17) என்பவர், தனது கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடைக்குள் தூக்கி வீசியுள்ளார். இதனால் தம்பதியர் அச்சமடைந்துள்ளனர். அந்த குண்டு வெடிக்காததால் மற்றொரு நாட்டு வெடிகுண்டை மீண்டும் வீசியுள்ளார். அந்த குண்டு கடைக்கு முன் வைத்திருந்த விளம்பரப் பதாகையில் விழுந்து வெடித்து லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அக்கம்பக்கத்தினர் சப்தம் போடவே, ராஜேஷ் தனது கையில் வைத்திருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டை அங்கேயே தரையில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இச்சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய நான்குனேரி காவல் துறையினர் மாணவர் ராஜேஷை (17) கைது செய்து, இளஞ்சிறார் சிறையில் அடைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.