தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.