வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று(27.11.23) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 29-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த புயலுக்கு மியான்மர் பரிந்துரைத்த மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மிக்ஜாம் புயலானது டிசம்பர் 5-ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், கிழக்கு இந்தியா, மியான்மர் பங்களாதேஷ் நாடுகளில் பாதிப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.