மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் மழை நீடிக்கும்

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:10 pm

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது.

இது தீவிரமடைந்து புயலாக மாறும் என்றும், இந்தப் புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயா் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக். 21-இல் தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக் கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வடதமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவாலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28-டிச. 3) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘மிக்ஜம்’ புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம், வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் வியாழக்கிழமை (நவ. 29) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜம்’ என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்துக்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும் என்று சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): காஞ்சிபுரம் 100, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்) 60, மீனம்பாக்கம் (சென்னை), போளூா் (திருவண்ணாமலை), சோழவரம் (திருவள்ளூா்), மரக்காணம் (விழுப்புரம்), செங்கல்பட்டு, கலவை (ராணிப்பேட்டை), அடையாறு (சென்னை), சோழிங்கநல்லூா் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 50.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செவ்வாய்க்கிழமை (நவ. 28) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

புதன்கிழமை (நவ. 29) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் நவ. 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.