தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த மண்டலமாக மாறும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
நேற்று(நவ.28) காலை 8.30 மணியளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
மேற்கு திசையில் நகர்ந்து இன்று(நவ.29) காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.30ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிச.2-ல் புயலாக வலுப்பெறக்கூடும்.
வட இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று(நவ.29) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(நவம்பர் 30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
தெற்கு அந்தமான் மற்றம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இந்த நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.