கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட 200 சவரன் நகைகளைத் தனிப்படையினர் மீட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவ.27-ம் தேதி இரவு தங்கம், வைரம் உள்பட 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
நகைக்கடையின் ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர் கடையிலிருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு, தோளில் ஒரு பையில் எடுத்துச்செல்வது போன்ற விடியோ சிசிடிவியில் பதிவாகிவாகியிருந்தது.
அதனடிப்படையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு நாள்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையடுத்து, கொள்ளையடித்தவர் பேருந்தில் பொள்ளாச்சி சென்றது தெரிய வந்தது. நகைக் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.
அதன்படி, கொள்ளையன் தருமபுரி, அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. கொள்ளையடித்த நகைகள் வீட்டில் தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
போலீஸார் விஜயகுமார் தாயாரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தலைமறைவாகியுள்ள விஜயகுமாரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.