கிராம சபைக் கூட்டம்: ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணிப்பு

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.
கிராம சபைக் கூட்டம்: ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணிப்பு

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.

பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 138 நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் மேலேரி உள்ளிட்ட 13 கிராமங்களை ஒருங்கிணைத்து சுமார் 4900 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய -  மாநில அரசுகள் அறிவிப்பு செய்து அதற்கான பணிகளை துவங்கியது.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 433 நாள்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டங்களில் ஆறு முறை விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று நீர் நிலைகள் ஆய்வு மேற்கொள்ள முன்னாள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் எனவும் இதில் கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை தீர்மானமாக கொண்டு வர தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய - மாநில அரசுகள் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து செயல்பட்டு வருவதை கண்டித்து இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் புறக்கணித்துள்ளனர்.

இந்த சிறப்பு கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் சங்கீதா , ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி,  வார்டு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

வார்டு உறுப்பினர்கள் மட்டுமே தங்களது குறைகளை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com