கோவை: கோவையில் பிரதம மந்திரியின் கடன் திட்டத்தின் கீழ் ரூ. 3,749 கோடி கடன் தொகையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
கோவை கொடிசியாவில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதில் கோவை அஇஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ், வால்பாறை அமுல் கந்தசாமி, பாஜகவின் வானதி சீனிவாசன், மத்திய அரசு செய்லாளர் ஜோஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம், யோஜனா திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர்க்காப்பீடுத் திட்டம், சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டம் போன்ற இந்த திட்டங்களின் கீழ் கடன் தொகை ரூ. 3,749 கோடி வழங்கினார்.
பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் சுய தொழில் செய்யும் முனைவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், மூத்த குடிமக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 3,000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை கோவை மாவட்ட முன்னோடி வங்கி, கனரா வங்கி, மாநில வங்கிகள் குழுமம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள மத்திய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.