நாகப்பட்டினம்: காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க கோரியும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் இன்று நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள், மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் கடைகள் அடைத்துள்ளனர்.
நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கார், ஆட்டோ, வேன் ஓட்டுநர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
குறிப்பாக சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணியில் இன்று மாலை 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.