கம்பம்: பலத்த மழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர் விநாடிக்கு 2165.69 கன அடியாக அதிகரித்து வருகிறது. தமிழக பகுதிக்குள் விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் சனிக்கிழமை மாலை 28.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 12.6 மி.மீ., மழையும், அணையின் மற்றொரு நீர்பிடிப்பு பகுதியான தென்காசி அருகே உள்ள சிவகிரி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்யாததால் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 2165.69 கன அடி தண்ணீர் வந்தது. அதனால் அணையில் நீர் மட்டம் 122.75 அடியானது.
மின் உற்பத்தி அதிகரிப்பு
அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாக இருந்தது. அதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நீர் மட்டம் 122.75 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 153 அடி), நீர் இருப்பு 3,175.50 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,165.69 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாகவும் இருந்தது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரம்: கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலி
தமிழக பகுதிக்கு தண்ணீர் அதிக அளவு திறந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.