நாகை- இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கியது. நேற்று(அக்.14) தொடங்கப்பட்ட நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. நாகை- இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 கோடி நிதியில் தமிழக அரசு மூலம் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக செரியாபானி என்ற கப்பல் கொச்சியில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 8, 9- ஆம் தேதிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். மேலும், அமைச்சா் எ.வ. வேலு, கப்பல் போக்குவரத்தை தொடா்ந்து நடத்தவும், பயணிகளுக்கான கட்டணத்தை ரூ. 7600-இல் 50 சதவீதத்தை மத்திய அரசு பயணிகளுக்கு மானியமாக வழங்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
இந்த நிலையில், போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் கப்பல் போக்குவரத்து இன்று(அக்.15) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு செல்லும் இந்த கப்பல் இனி திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.