சிவகங்கை: சிவகங்கை அருகே தனியார் கல்லூரி பேருந்தும், சரக்கு வாகனமும் திங்கள்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமாஞ்சோலையில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி. பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை காலை கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தது. பேருந்தை இளங்கோ என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
சரக்கு வாகனம் மோதியதில் சாலையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்றுள்ள கல்லூரிப் பேருந்து.
கரும்பாவூர் அருகே வந்துகொண்டிருந்த போது, படமாத்தூரிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கல்லூரிப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளது.
இதில், கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் என்பவரும் காயமடைந்தார்.
காயமடைந்த அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.