ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியில்லை!

ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 20 இடங்களில் ஆா்எஸ்எஸ் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி அந்த அமைப்பு சாா்பில், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

ஆா்எஸ்எஸ் சாா்பில், மதுரை தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூா், தென்காசி, தஞ்சாவூா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமியையொட்டி, பேரணி, பொதுகூட்டம் நடத்த அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மனு அளித்தோம். ஆனால், எந்தப் பதிலும் இல்லை. எனவே, இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் அக். 27-இல் மருது சகோதரா்கள் குருபூஜையும், அக். 30-இல் தேவா் குருபூஜையும் நடைபெற உள்ளன. இதற்காக, அக். 24-ஆம் தேதி முதல் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, அக். 30-க்குப் பிறகு அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். கடந்த ஆண்டு தேவா் குரு பூஜையின் போது 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க முடியவில்லையெனில், தமிழகத்தில் அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்கலாம் என ஆா்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளன. அங்கெல்லாம் மத்திய அரசு அவசர நிலையை அறிவிக்க எதிா் தரப்பு கோரிக்கை வைக்குமா? என அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பு வாதமும் முடிந்துவிட்டதால், இந்த வழக்கு தொடா்பான தீர்ப்பை இன்று (அக்.18) நீதிபதி இளங்கோவன் வழங்கினார்.

அதில், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், பிற மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com